Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவன தலைவர் எல்.சபாரத்தினம் காலமானார்

சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும்தலைவரும் பல்வேறு பெரு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவருமான எல்.சபாரத்தினம் (80) நேற்று காலமானார்.

வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். மனைவி காலமாகி விட்டார்.

மறைந்த சபா ரத்தினத்தின் உடல் அரசின் கரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு நேற்றுமாலை சென்னை பெசன்ட் நகர்மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக அவரது மருமகன் நாகப்பன் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் தெரிவித்தார்.

காரைக்குடியில் பிறந்த எல்.சபாரத்தினம், செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல் இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றினார். கோரமண்டல் சுகர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஐசிஎல் நிதி சேவைநிறுவனம், ஐசிஎல் சிப்பிங் லிமிடெட், கோரமண்டல் எலக்ட்ரிக் நிறுவனம், ஐசிஎல் செக்யூரிட்டீஸ், பயோசிந்த் லைப் சயின்சஸ் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர், இந்தியா சிமென்ட்ஸ் ஆலோசகர் என்று பல்வேறு பெரு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்து திறம்பட பணியாற்றியுள்ளார்.

பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திரா தலைவர், டி.எஸ்.நாராயணசாமி கலை, அறிவியல் கல்லூரி அறங்காவலர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், மத்திய கைலாஷ் கோயில் அறங்காவலர், சென்னை மியூசிக் அகாடமி புரவலர், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் தலைவர் என்று பல்வேறு கல்வி, கலை, கலாச்சார அமைப்புகளில் பொறுப்புகளை வகித்துள்ளார்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சிப்காட் என்று பொதுத்துறை, தமிழக அரசு நிறுவனங்களில் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x