Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

கரோனா பரவல் காரணமாக வங்கிகள் இன்று முதல் அரை நாள் மட்டும் இயங்கும்

கரோனா பரவல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கிகள் இன்று முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை அரை நாள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழும ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.மொகந்தா, வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கி வேலை நேரம் குறைக்கப்படுகிறது. இதன்படி, வங்கி மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள், வங்கிக் கிளைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் 26-ம் தேதி (இன்று) முதல் வரும்30-ம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பிறகு, நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு,வேலை நேரத்தை மாற்றியமைப் பது குறித்து முடிவு செய்யப்படும்.

வேலை நேரத்தின்போது, வாடிக்கையாளர்களுடன் வங்கி அதிகாரிகள் நேரடி தொடர்பு கொள்ளக் கூடாது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக வருவதை தவிர்க்க, மின்னணு (டிஜிட்டல்) வங்கி சேவை தளத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

வங்கி ஊழியர்களில் இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் வீட்டில் இருந்து பணிபுரியலாம்.

அதேபோல, சில வங்கிக் கிளைகளில் செயல்படும் ஆதார் பதிவு மையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் உள்ள வங்கிக் கிளைகளில் கூட்டத்தை சமாளிக்க, தேவைப்பட்டால் காவல் துறையினரின் உதவியை நாடலாம். கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வங்கிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி செயல்படலாம்.

ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரங்கள் தடையின்றி இயங்குவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். தகுதி உள்ள அனைத்துவங்கி ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் கரோனா தடுப்பூசி போடுவதை வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.

முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் உட்பட கரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறை களையும் பின்பற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x