Last Updated : 25 Apr, 2021 01:17 PM

 

Published : 25 Apr 2021 01:17 PM
Last Updated : 25 Apr 2021 01:17 PM

புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா: ஒரு நாள் பாதிப்பு 1,000-ஐ கடந்தது: மேலும் 11 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு நாள் பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 748 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் (ஏப். 25) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,632 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் புதுச்சேரியில் 815 பேருக்கும், காரைக்காலில் 101 பேருக்கும், ஏனாமில் 40 பேருக்கும், மாஹேவில் 52 பேருக்கும் என மொத்தம் 1,008 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது. இதில் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் 235 பேர், கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 300 பேர், கோவிட் கேர் சென்டரில் 634 பேர், காரைக்காலில் 51 பேர்,

ஏனாமில் 137 பேர், மாஹேவில் 30 பேர் என மருத்துவமனைகளில் 1,387 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் புதுச்சேரியில் 4,624 பேர், காரைக்காலில் 792 பேர், ஏனாமில் 229 பேர், மாஹேவில் 256 பேர் என 5,901 பேர் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 7288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர், முதலியார்பேட்டையைச் சேர்ந்த 89 வயது முதியவர் ஆகிய இருவரும் ஜிப்மர் மருத்துவமனையிலும், உருளையன்பேட்டையைச் சேர்ந்த 55 வயது ஆண் நபர் இந்திரா காந்தி பொது மருத்துவமனையிலும், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண், செருகலைப்பாளையம் 42 வயது பெண்,

உழவர்கரை 61 வயது மூதாட்டி, திருபுவனை பாளையைம் 75 வயது முதியவர் ஆகியோர் 4 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியிலும், மண்ணாடிப்பட்டு 85 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் 85 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் சீனிவாசா அப்பார்ட்மென்ட் 74 வயது பெண் ஆகியோர் 3 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், ஏனாம் பகுதியைச் சேர்ந்த 64 வயது ஆண் ஏனாம் அரசு மருத்துவமனையிலும் என ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 748 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.40 சதவீதமாக உள்ளது. இதனிடையே இன்று 476 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 243 (84.92 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 577 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6 லட்சத்து 88 ஆயிரத்து 469 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 1 லட்சத்து 84 ஆயித்து 431 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் 31 பேர் உயிரிழப்பு:

புதுச்சேரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளது. 4,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x