Published : 24 Apr 2021 05:07 PM
Last Updated : 24 Apr 2021 05:07 PM

கரோனா சவால்; கவனம் கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்: ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸபாலே | கோப்புப் படம்.

சென்னை

கரோனா நெருக்கடி நேரத்தில் நாம் அனைவரும் 5 விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸபாலே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''நம் நாட்டில் கரோனா தொற்று மீண்டும் மிகப்பெரிய சவாலாக எழுந்துள்ளது. தொற்றின் வேகமும், தீவிரமும் இம்முறை கடுமையாக உள்ளது. நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான மக்கள் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துள்ளனர். இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது .

நிலைமை கடும் சவாலாக இருந்தாலும், நமது சமுதாயத்தின் சக்தி மிகப் பெரியது. கடுமையான இடர்களையும் சந்திக்கும் நமது ஆற்றல் பற்றி உலகமே அறியும். பொறுமை, உற்சாகம், சுயக் கட்டுப்பாடு, பரஸ்பர உதவி மூலம் இந்த நெருக்கடியில் இருந்து நாம் மீள்வோம் என்பது உறுதி.

கரோனா திடீர் என வேகமாகப் பரவுவதால், நோயாளிகளுக்கு படுக்கை, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு மருத்துவமனையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற மிகப் பெரிய தேசத்தில், பிரச்சனைகள் திடீரென பெரியதாகி விடுகின்றன. இதைச் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மருத்துவத் துறையினர், பாதுகாப்புத் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தங்கள் கடமைகளைச் செய்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு சமூக அமைப்புகளும், ஆன்மிக அமைப்புகளும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அதே நேரத்தில், சமுதாயத்தில் உள்ள சில நாசகார மற்றும் விஷம இயக்கங்கள், இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி நாட்டில் குழப்பம் மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்பதும் செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டு குடிமக்கள் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடும் நேரத்தில், இதுபோன்ற விஷம கும்பல்களின் சதி குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க ஸ்வயம்சேவகர்கள், சமூக அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், சேவை அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறையினர் அனைவரும் உடனடியாக ஆவன செய்யவேண்டும். எந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாகச் சமாளிக்க முன்வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொள்கிறது.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் சில விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம் .

ஆரோக்கியம் மற்றும் கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருவோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சுகாதாரம், கூட்டம் சேராமை, ஆயுர்வேத பானங்கள், ஆவி பிடித்தல், தடுப்பூசி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மிக மிக அவசியம் எனில் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லவும். பொதுமக்கள் முடிந்தவரை தங்கள் அத்தியாவசிய தேவைகளை வசிப்பிடத்திற்கு அருகிலேயே பூர்த்தி செய்ய முயலவும்.

மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும். சமுதாயத்தில் நம்பிக்கை மற்றும் நேர்மறையான சூழலை ஏற்படுத்துமாறு பத்திரிகையாளர்கள் உட்பட சமுதாயத்தில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

சமூக வலைதளங்களில் இருப்போர், கட்டுப்பாட்டுடனும், விழிப்புடனும் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டும்''.

இவ்வாறு ஸ்ரீ தத்தாத்ரேயா ஹோஸபாலே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x