Published : 24 Apr 2021 12:59 PM
Last Updated : 24 Apr 2021 12:59 PM

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் தனியார் நிறுவன ஊழியர்கள்: வாழ்வாதார திட்டம் கோரி வழக்கு

சென்னை

கரோனா ஊரடங்கால் வேலையிழப்பு, ஊதிய இழப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க உயர் மட்டக்குழுவை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மயிலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘கரோனா பரவலை தடுக்க 2020 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு காலத்தில், தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை. அமெரிக்காவைப் போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு என பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் ஊதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள சலுகைகள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவில்லை என்பதால், ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்”. என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x