Published : 24 Apr 2021 12:48 PM
Last Updated : 24 Apr 2021 12:48 PM

கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க முதல்வர் உத்தரவு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக, ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்தார்.

சென்னையில் இன்று (ஏப். 24) சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த 363 கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மினி கிளீனிக்குகளில் 1,645 மருத்துவர்கள் உள்ளனர். அவர்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோவிட் மருத்துவமனைகளுக்கு நியமிக்க கூறியுள்ளோம்.

பெரிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலம் தாழ்த்தி செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகளை அடுத்த பத்து நாட்களுக்கு ஒத்தி வைக்க கூறியுள்ளோம்.

சென்னையில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆர்.எஸ்.ஆர்.எம், ஐஓஜி மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த உத்தரவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 1,618 படுக்கைகளில் 1,088 படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 1,100 படுக்கைகளில் 976 படுக்கைகள் நிரம்பிவிட்டன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகளில் 294 நிரம்பிவிட்டன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 575 படுக்கைகளில் 501 நிரம்பிவிட்டன. கிண்டி மருத்துவமனையில் 525 படுக்கைகளில் 461 நிரம்பிவிட்டன. மொத்தமாக 4,368 படுக்கைகளில் 3,320 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 1,048 படுக்கைகள் காலியாக உள்ளன.

கோவிட் ஹெல்த் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ள 10 மருத்துவமனைகளில் 1,750 படுக்கைகளில் 229 நிரம்பிவிட்டன. 1,021 படுக்கைகள் காலியாக உள்ளன. கோவிட் கவனிப்பு மையங்களில் 11 ஆயிரத்து 645 படுக்கைகளில் 2,142 தான் நிரம்பியுள்ளன. 9,503 படுக்கைகள் காலியாக உள்ளன.

படுக்கைகள் கிடைக்காது என்ற பயம் வேண்டாம். தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் படுக்கைகளை தர முன்வந்துள்ளன. பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளை ஒழுங்காக கடைபிடித்தால்தான் தொற்று சங்கிலியை அறுக்க முடியும்.

கேரளாவில் பயமின்றி வீட்டு தனிமையில் நோயாளிகளை சிறப்பாக வைக்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் அதனை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துடனும் நாங்கள் பேசி வருகிறோம். டெல்லி, மகாராஷ்டிராவின் நிலைமை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் பணியாற்றி வருகிறோம்".

இவ்வாறு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x