Published : 24 Apr 2021 12:19 PM
Last Updated : 24 Apr 2021 12:19 PM
கரோனா பரவல் உச்சத்தை எட்டி வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இன்று இரவு தொடங்கும் 36 மணி நேர முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அவசியமான காரணமின்றி வெளியில் வந்தால் வழக்குப்பதிவும், வாகனம் பறிமுதலும் செய்யப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் அலை கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் அமலான ஊரடங்கு தொடர்ந்து 10 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. இடையில் தொற்று குறைவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் மார்ச் மாதம் மீண்டும் பரவத்தொடங்கிய இரண்டாவது அலை ஒரே மாதத்தில் 3 மாதத்தில் எட்டவேண்டிய உச்சத்தைத் தாண்டியது. தினம் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டின் உச்சமான 6,900-ஐ தாண்டி தினம் 14,000 என்கிற அளவுக்கு செல்கிறது.
இதையடுத்து ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தினமும் இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வார இறுதி நாள் ஊரடங்கு இன்று இரவு தொடங்கி திங்கள் கிழமை காலை வரை 36 மணி நேரம் அமல்படுத்தப்படுகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருவிழாக்களுக்குத் தடை, பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி, திரையரங்குகள், மால்கள் போன்றவற்றில் 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அனுமதி, ஆட்டோக்களில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
திருமண நிகழ்வுகளில் 100 நபர்கள் வரை மட்டுமே அனுமதி. இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. என பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அன்று மருத்துவம், பால், பேப்பர் விநியோகம் சார்ந்தவைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது.
திருமணம் சுப நிகழ்ச்சிகள் முன்னரே முடிவு செய்திருந்தால் அதற்கான அழைப்பிதழைக்காட்டி செல்லலாம், தேவையின்றி வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு செய்து அவர்கள் வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். இதேபோன்று மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT