

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் நேற்று தஞ்சாவூரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக, திருவிழா, மேடை நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கோயில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் கிராமியக் கலைஞர்கள், மேடை நடனக் கலைஞர்கள், அதைச் சார்ந்த தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மேடை நடனக் கலைஞர்கள் சங்கத்தினர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதல்வருக்கு மனுக்களை அனுப்பினர்.
இந்நிலையில், தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பாக, தஞ்சாவூர் மாவட்ட மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் இணைந்து நேற்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம், செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். அப்போது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பிச்சை எடுக்கும் நிலையில் மேடை நடனக் கலைஞர்கள் இருப்பதால், உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் சங்கத் தலைவர் தர்மலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல், 2019-ம்ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2020-ம் ஆண்டு கரோனா ஊரடங்கு என ஏற்கெனவே 3 ஆண்டுகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டும் கரோனா பரவல் காரணமாகக் கலைஞர்களின் நிலைமை மோசமாகி விட்டது. பொது இடங்களில் இரவு 7 முதல் 10 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதி இருந்தும், இரவு ஊரடங்கால் அதுவும் நடத்தமுடியாமல் போய்விட்டது.
அரசு எங்களின் வாழ்வுக்காக கலை பண்பாட்டு துறையில் உறுப்பினர்களாகப் பதிவு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.