Last Updated : 23 Apr, 2021 10:06 PM

 

Published : 23 Apr 2021 10:06 PM
Last Updated : 23 Apr 2021 10:06 PM

தம்பதி தூக்கிட்டு தற்கொலை: மகன் திருமணம் நின்றதால் சோகம்

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மகன் திருமணம் நின்று போன சோகத்தில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள புளியம்பட்டி ஈசன் ஆசாரி தெருவை சேர்ந்தவர் தங்கமணி(39). இவர் சொந்தமாக தறி வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ரத்தினம்(49). இவர்களது மகள்கள் மற்றும் ராஜா(28) என்ற மகன் உள்ளனர். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜாவுக்கு மகுடஞ்சாவடியில் பெண் பார்த்து பெற்றோர் நிச்சயம் செய்தனர். நிச்சயமான பெண்ணுடன் ராஜா அலைபேசியில் வந்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெண்ணை பிடிக்கவில்லை என்று ராஜா பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் தங்கமணி வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்துக்குள் முடிவு தெரிவிப்பதாக தங்கமணி-ரத்தினம் தம்பதி பெண் வீட்டாரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (22-ம் தேதி) இரவு அனைவரும் உறங்க சென்றனர். நேற்று காலை (23-ம் தேதி) தங்கமணியின் இரண்டாவது மகள் சுகன்யா மாடியில் இருந்து கீழே வந்து பார்த்துள்ளார். அப்போது, தங்கமணி-ரத்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீஸார், தம்பதி உடலை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், மகன் நிச்சயமான பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறியதால், மனவேதனை அடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x