

77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது கரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக் கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தமிழகத்தில் 75 வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூமில் மூன்றடுக்கு காவலில் பாதுக்காப்பாக உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள விஐபி தொகுதிகளில் முக்கியமானது கரூர் தொகுதியாகும், இங்கு முன்னாள் இந்நாள் போக்குவரத்து அமைச்சர்கள் திமுக, அதிமுக சார்பில் மோதுகின்றனர், இது தவிர அதிகளவில் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாகவும் கரூர் உள்ளது. இங்கு 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனால் மேஜைகளை அதிகப்படுத்தி ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தார். கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் சேரா வண்ணம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
அவரது மனுவில், “வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. கரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது தனி மனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும்.
எனவே, வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும், கிருமிநாசினி வைக்க வேண்டும், முகக் கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை, எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்”. என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் விஜய பாஸ்கர் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திங்கள் கிழமை (ஏப் 26) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.