Last Updated : 23 Apr, 2021 04:25 PM

 

Published : 23 Apr 2021 04:25 PM
Last Updated : 23 Apr 2021 04:25 PM

புதுச்சேரியில் புதிதாக 792 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்தைத் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் (ஏப். 23) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,081 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 620 பேருக்கும், காரைக்காலில் 92 பேருக்கும், ஏனாமில் 47 பேருக்கும், மாஹேவில் 33 பேருக்கும் என மொத்தம் 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 1,297 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 5,033 பேரும் என மொத்தமாக 6,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த புதுச்சேரி தட்டாஞ்சாவடி சுப்பையா நகரைச் சேர்ந்த 57 வயது ஆண் நபர், கருவடிக்குப்பம் காந்தி நகரைச் சேர்ந்த 53 வயது ஆண் நபர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 728 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.42 சதவீதமாக உள்ளது. இதனிடையே இன்று 383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 314 (86.26 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 466 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6 லட்சத்து 80 ஆயிரத்து 750 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள் 30 ஆயிரத்து 946 பேர், முன்களப் பணியாளர்கள் 18 ஆயிரத்து 222 பேர், பொதுமக்கள் 1 லட்சத்து 12 ஆயித்து 280 பேரும் என இரண்டாவது தவணை உட்பட 1 லட்சத்து 79 ஆயிரத்து 693 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x