Published : 23 Apr 2021 03:36 PM
Last Updated : 23 Apr 2021 03:36 PM

அதிமுக எம்எல்ஏ சத்யா மீதான தொகுதி நிதி புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

சென்னை

தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாக பயன்படுத்திய அதிமுக எம்எல்ஏ தி.நகர் சத்யா மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் தாக்‌ஷன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ தி.நகர் சத்யா என்கிற சத்திய நாராயணனுக்கு, 2017-18 சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் வசதி மேம்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 2017 மே 29 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மழைகாலத்தில் குடிநீருக்காக சிரமப்படும் பொதுமக்களுக்கு, குழாய்கள் அமைக்க பயன்படுத்த வேண்டிய தொகையில் 8 லட்ச ரூபாயை மட்டுமே செலவழித்துள்ளார். மீதத்தொகையை 31 சாலைகள் பராமரிப்புக்காக செலவழித்து உள்ளார். அதற்கான டெண்டரையும், டி.எம்.சுப்ரமணியம் என்பவருக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளார்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கூட்டுடன் வேறு பணிக்கு நிதியை பயன்படுத்தி மோசடி செய்துள்ளதால், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி கடந்த ஜனவரி 29-ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தேன்.

புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பால் வியாபாரியாக இருந்த சத்யாவிற்கு, தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளதது. என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x