Published : 23 Apr 2021 10:52 AM
Last Updated : 23 Apr 2021 10:52 AM

கரோனா பாதிப்பு: கோட்டூர்புரம் உளவுத்துறை தலைமைக் காவலர் உயிரிழப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோட்டூர்புரம் உளவுப்பிரிவு தலைமைக் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய கரோனா பாதிப்பு 12,652 ஆக உள்ளது. சென்னையின் நேற்றைய தொற்று 3,719 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டாவது அலையின் வேகம் மும்மடங்கு உள்ளது. முந்தைய பரவல் போல் அல்லாமல் அறிகுறிகள் அற்ற கரோனா காரணமாக பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வயிற்று வலி, டயரியா போன்ற அறிகுறிகள் இருந்தாலும் கரோனா தொற்று அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றாமல் இருந்தாலே தொற்றில் இருந்து தப்பிக்கலாம், செல்வதாக இருந்தால் முகக்கவசம் கட்டாயம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா தொற்று பாதிப்பைத் தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதும் நடக்கிறது.

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் கருணாநிதி (48). இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை காவலராக அயல் பணியில் இருந்தார்.

கடந்த 13ஆம் தேதி வயிற்று வலிக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைக்காகச் சென்றார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மறுநாள் (14.04.21) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்படவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஏப்.21 அன்று பகல் நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை 5.35 மணி அளவில் திடீர் மாரடைப்பு காரணமாக கருணாநிதி உயிரிழந்தார். 1997-ம் ஆண்டு பணியில் இணைந்த அவர், ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். அவருக்குத் திருமணமாகி சுந்தரவள்ளி (42) என்ற மனைவியும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவரது மரணம் போலீஸார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கருணாநிதியின் உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x