Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

குப்பையில் கிடைத்த 10 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளி

சென்னை ராயபுரம் ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (55). இவர் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் கொருக்குப்பேட்டை ஏகப்பன் தெரு குப்பைத் தொட்டியில் இருந்த குப்பையை தரம் பிரித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த பையில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. உடனே மோகனசுந்தரம் நகையை கொருக்குப் பேட்டை போலீஸில் ஒப்படைத்தார்.

இந்நிலையில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தேவி என்பவர் 10 பவுன் நகை, வீட்டிலிருந்து காணாமல் போயிருப்பதாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். தேவிக்கு திருமணம் நடைபெற இருப்பதும், அதற்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த நகை தவறுதலாக குப்பைத் தொட்டிக்கு சென்றதும், கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தவமணியின் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தொட்டியில் கிடைத்த நகையை காவல் ஆய்வாளர் தவமணி, திருமணப் பெண் தேவியிடம் ஒப்படைத்தார். நகையை கண்டுபிடித்து கொடுத்த மோகனசுந்தரத்தை போலீஸாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x