Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் குடும்பம் குடும்பமாக கரோனா பாதிப்பு: பள்ளி, கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்ற கோரிக்கை

செங்கல்பட்டு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் குடும்பம் குடும்பமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளி,கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று2-வது அலை வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 1,300-க்கும்மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.

அதனால், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம் பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மறைமலைநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் குடும்பம் குடும்பமாக தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளின் அருகில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தகுதியுள்ள நபர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது” என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பியதால் பள்ளி, கல்லூரிகளை கரோனா மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x