இன்று உலக புத்தக தினம் கொண்டாட்டம்: புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வேண்டுகோள்

இன்று உலக புத்தக தினம் கொண்டாட்டம்: புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வேண்டுகோள்
Updated on
1 min read

உலக புத்தக தினம் ஏப்.23-ம்தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம். சிறந்த சமுதாயம் படைக்க உறுதியேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக புத்தக தினம் ஏப்.23-ம்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி - பதிப்பாளர் - வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, பராமரிப்பு, தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதன் ஓர் உலகளாவிய இயக்கமாகவே 1996-ம் ஆண்டு ஏப்.23 நாளில்உலக புத்தக தின கொண்டாட்டம் தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தொடங்கிய உலக புத்தக தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் தொடர்கிறது.

வரலாற்றின் தொடர்ச்சியை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அறிவியல் கண்ணோட்டத்தை பரவலாக்கவும் புத்தக வாசிப்பே நமக்கு பெரிதும் உதவும். இன்றைய சவால் நிறைந்த சூழலில்,மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களேநமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.

எனவே உலக புத்தக தினத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் முயற்சியை தொடர்வோம். படைப்பாளிகள், வாசகர்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in