Last Updated : 22 Apr, 2021 05:42 PM

 

Published : 22 Apr 2021 05:42 PM
Last Updated : 22 Apr 2021 05:42 PM

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு; கட்டுப்பாடுகளை வெளியிட்டார் அரசு செயலாளர்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரி முழுவதும் வாரந்தோறும் வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு கட்டுப்பாட்டு அறிவிப்புகளை அரசு செயலாளர் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக அரசு செயலாளர் அசோக்குமார் இன்று (ஏப். 22) வெளியிட்டுள்ள உத்தரவு:

"புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் இரவு பத்து மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல், வரும் 23-ம் தேதி இரவு (நாளை) முதல் வரும் 26-ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறை வார இறுதி நாட்களில் வருகிறது.

அதன்படி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு இருக்கும். ஊரடங்கின் போது ஹோட்டல்கள், மளிகைக்கடைகள், பழம் மற்றும் காய்கறி கடைகள், பால் பூத், பால் பொருட்கள் விற்பனையகம், கறி மற்றும் மீன் கடைகள், மருந்தகங்கள், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், ஆம்புலன்ஸ், சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து (பஸ், ஆட்டோ, டாக்சி), விவசாயம் சார்ந்த பொருட்கள் போக்குவரத்து, வீட்டு விலங்குகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை கடை, விவசாயம் சார்ந்த பணிகள், பெட்ரோல் பங்க், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகம், ஏடிஎம், இன்டர்நெட் சர்வீஸ், கேபிள் சர்வீஸ், ஐ.டி., குடிநீர் விநியோகம், மின்விநியோகம், தொழிற்சாலைகள், வீடுகளுக்கு உணவு டெலிவரி ஆகியவை அனுமதிக்கப்படும்.

இக்காலத்தில் அரசு பணி உள்பட அத்தியாவசிய பணியில் இருப்போர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். பயணிகள் டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும்.

அதன்பிறகு, வரும் 26-ம் தேதி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் ஐந்து நாட்களும், கடைகள் பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இதனால் அத்தியாவசிய தேவைக்கு பாதிப்பு ஏற்படாது. ஹோட்டல்கள், டீக்கடைகள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அதேபோல், திருமணங்களில் 100 நபர்களும், இறுதி நிகழ்வுகளில் 50 பேரும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வார இறுதி நாட்கள் ஊரடங்கிலும் இதே நடைமுறை தொடரும். மதம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள், ஒன்றுகூடும் நிகழ்வுகள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மதம் சார்ந்த இடங்களில் வழக்கமான பூஜைகளை கரோனா விதிகளுக்கு உட்பட்டு நடத்தலாம்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பால் ஊரடங்கில் தளர்வு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் அதிகாரிகள் கூட்டத்தில் இருநாள் ஊரடங்கு தொடர்பாக திடீர் அறிவிப்பை வெளியிட்ட சூழலில், அரசியல் கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் ஊரடங்கு அமலில் இருந்தாலும், பெரும்பாலான கடைகளை திறக்கவும் அனுமதியை தந்துள்ளதால், இது ஊரடங்கா என்ற குழப்பத்தில் மக்கள் தவிக்கின்றனர். இது தொடர்பாக, அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் யாரும் தெளிவான பதிலை தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x