

கங்கைகொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகளில் தற்போது பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
அதன்படி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம், கடந்த ஜனவரி மாதம் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம், மண்மலை, மாளிகைமேடு உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு செய்வதற்காக சுற்றியுள்ள 18 கிலோ மீட்டர் சுற்றளவில் சென்று தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்றான மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மண்டி கிடக்கும் புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து, ரேடார் கருவி மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், பத்துக்கு பத்து என்ற அளவில் குழிகள் தோண்டப்பட்டு, அந்த இடத்தில் பணி நடைபெறுகிறது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்தி அலுவலர்கள் செய்து வருகின்றனர். மேலும், அந்த இடத்தில் கிடைக்கப்பட்ட பானை ஓடு வில்லைகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள் மேலும் செப்புக்காசு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், புராதன பொருட்கள் கிடைக்கின்றனவா என, தீவிர ஆராய்ச்சியில் பணியாளர்களைைக்கொண்டு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.