Published : 22 Apr 2021 02:53 PM
Last Updated : 22 Apr 2021 02:53 PM

அழகுபடுத்தும் சிகிச்சையில் முகம் பாதிப்பு: நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ்

சென்னை

முகப்பொலிவு சிகிச்சையைத் தவறாக அளித்ததால் முகம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியும் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நடிகை ரைசா வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை, நந்தம்பாக்கத்தில் வசித்து வருபவர் நடிகை ரைசா வில்சன். இவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றுப் புகழ் பெற்றவர். இவர் முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தை அணுகியுள்ளார்.

அங்கிருந்த மருத்துவர் உத்தரவாதத்தின் அடிப்படையில் மார்ச் 25ஆம் தேதி மருத்துவர் ஒருவரும், மற்றொரு நபர் மூலம் போடாக்ஸ் சிகிச்சையை ரைசா எடுத்துக்கொண்டு, அதற்குக் கட்டணமாக 62 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளார்.

பத்து நாட்களுக்குப் பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ரைசா, மீண்டும் மருத்துவரை அணுகியபோது, டெர்மா பில்லர்ஸ் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் முறையே ஏன் இந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றும், பணம் பறிப்பதுதான் நோக்கமா என்றும் ரைசா கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னர் ஏப்ரல் 16ஆம் தேதி ஆலோசனைக்குப் பிறகு ஏப்ரல் 17ஆம் தேதியே டியர் ஃப்ரீ ஃபில்லர் சிகிச்சையை மருத்துவர் அளித்துள்ளார். அதற்காக 65 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக ரைசா செலுத்தியுள்ளார்.

சிகிச்சைக்குப் பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்திலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், முகமும் வீங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையே காரணம் எனக் குற்றம்சாட்டி, வீங்கிய முகத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைசா பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், தான் கேட்ட சிறிய அளவிலான சிகிச்சைக்கு மாறாக வலுக்கட்டாயமாக வேறு சிகிச்சை அளித்ததால்தான் தனது முகம் பாதிப்புக்கு உள்ளானதாக ரைசா வேதனை தெரிவித்தார். மருத்துவரிடம் விளக்கம் பெற முயன்றும், சந்திக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மருத்துவர் தரப்பில் அளித்த விளக்கத்தில், நடிகை ரைசா மருத்துவ சிகிச்சையை முறையாகப் பின்பற்றவில்லை என்றும், சிகிச்சைக்கான விளக்கம் தரப்பட்டதற்கான படிவத்தில் கையெழுத்து பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் தவறான சிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நடிகை ரைசா வில்சன் நேற்று (ஏப்ரல் 21) வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரைசா வில்சன் தரப்பு வழக்கறிஞர் ஜி. ஹரிஹர அருண் சோமசங்கர் அனுப்பியுள்ள நோட்டீஸில், 15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்காவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மூலம் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் என சிகிச்சை அளித்த மருத்துவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x