Published : 24 Dec 2015 09:39 PM
Last Updated : 24 Dec 2015 09:39 PM

பாமக ஆட்சிக்கு வந்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மீட்போம்: அன்புமணி ராமதாஸ் உறுதி

பாமக ஆட்சிக்கு வந்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மீட்போம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, ''மாற்றம், முன்னேற்றம் என்ற இரண்டு மந்திர வார்த்தைகள் தமிழகத்தையே புரட்டிப் போடப் போகிறது. திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளை அப்புறப்படுத்தி தமிழகத்தில் அரசியல் சூறாவளி ஏற்படப் போகிறது. அந்த மாற்றத்தை பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள்தான் செய்யப் போகிறார்கள்.

நான் என்ன சொன்னாலும் காப்பி அடிக்கிறார்கள். தேர்தலில் நாங்கள் தனியாக நிற்கிறோம். ஓட்டுக்காக ஒருபைசாகூட தர மாட்டோம். இதையும் தம்பி மு.க.ஸ்டாலின் காப்பி அடிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் பேசினார்.

பாமக இளைஞரணித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத சூழல் இப்போது நிலவுகிறது. அதிமுக, திமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது. வரும் தேர்தலில் பாமக ஆட்சியைப் பிடிக்க கட்சியில் உள்ள இளைஞர்கள் எனது செயல்திட்டத்தை 100 நாட்களில் தீவிரமாக நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் எனக்கு 100 இளைஞர்களின் பெயர், புகைப்படம், முகவரி, செல்போன் எண் (பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் வசதிகளுடன்) ஆகியவை வேண்டும். இத்தகவல்களை தைப் பொங்கலுக்கு முன்னதாகத் தர வேண்டும்.

பாமக ஆட்சிக்கு வந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றி மன்னர் காலத்தில் இருந்தது போல குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்போம். விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன், கம்யூனிஸ்டு கட்சிகள், பாஜக, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெற முடியுமா?'' என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x