Published : 21 Apr 2021 07:47 PM
Last Updated : 21 Apr 2021 07:47 PM

யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்துக்கு மறு தணிக்கை கோரிய வழக்கில் சென்சார் போர்டு, தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்தில் முடிதிருத்துவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக பிரச்சினை எழுந்தது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி படத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் 'மண்டேலா' திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் மதிப்புமிக்க சமுதாயமாகும். 'மண்டேலா' படக் காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. மேலும், இந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களைக் கழிவறையைக் கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடிதிருத்தும் தொழிலாளியைச் செருப்பால் அடிப்பதும், காரில் ஏறத் தகுதி இல்லை என்று காரின் பின்னே ஓடி வரச் சொல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனைத் தணிக்கைக் குழு தணிக்கை செய்யத் தவறிவிட்டது.

எனவே, யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்படத் தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குநர் மடோனா அஸ்வின் ஆகியோர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x