Published : 21 Apr 2021 06:49 PM
Last Updated : 21 Apr 2021 06:49 PM

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார்; விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழக சிறப்பு டிஜிபி அந்தஸ்து அதிகாரி பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. புகார் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அதுகுறித்து விசாரிக்க மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த வழக்கைத் தாமாக முன்வந்து கையிலெடுத்தது உயர் நீதிமன்றம். சிறப்பு டிஜிபி அதிகாரியும், அவருக்கு உதவிய காஞ்சிபுரம் எஸ்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இரண்டு கட்ட விசாரணையை முடித்து அதன் அறிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் தாக்கல் செய்துவிட்டது.

விசாகா கமிட்டியும் தனது விசாரணையின் முதற்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து உயர் நீதிமன்றம் விசாரணையை கவனித்து வருகிறது. இந்நிலையில், பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.யான கே.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்தப் புகார் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து, விசாரணையைக் கண்காணித்து வருகிறார்.

சிறப்பு டிஜிபிக்கு எதிரான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து வருகிறோம். அந்த வழக்கு ஏப்ரல் 30ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பெண் எஸ்.பி. அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட உட்புகார் விசாரணைக் குழு (விசாகா கமிட்டி), அதன் அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்புகார் விசாரணைக் குழுவின் விசாரணைக்கும், சிபிசிஐடி விசாரணைக்கும் நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணையைத் தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை எனக் கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சிறப்பு டிஜிபி மீதான விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேபோல நியாயமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டுமெனத் தெரிவித்துள்ள நீதிபதிகள், ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x