Published : 21 Apr 2021 11:00 AM
Last Updated : 21 Apr 2021 11:00 AM

கரோனா தடுப்பூசி 100% பாதுகாப்பானது: சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

கரோனா தடுப்பூசி 100% பாதுகாப்பானது என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை, தரமணியில் 900 படுக்கைகள் கொண்ட 13-வது கரோனா பாதுகாப்பு மையத்தை இன்று (ஏப். 21) மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"28 ஆயிரத்து 5 பேர் தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று குணமடைவோரின் பெயர்களைப் பட்டியலில் இருந்து எடுத்துவிடுவோம். வீட்டுத் தனிமையில் உள்ளவர்களின் பெயர்களை 10 நாட்கள் கழித்து தானாகவே நாங்கள் எடுத்துவிடுவோம்.

தனிமைப்படுத்துதல், வீட்டுக்கு வீடு சர்வே ஆகியவற்றை இன்னும் தீவிரப்படுத்த உள்ளோம். மறுபடியும் மக்கள் தடுப்பூசியை வேகமாக எடுத்துக்கொள்கின்றனர். கரோனா தடுப்பூசி 100% பாதுகாப்பானது. 13-14 லட்சம் பேருக்கு மேல் இதுவரை தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். சென்னைக்கு மட்டும் 2 லட்சம் தடுப்பு மருந்துகளைப் பொது சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. தினமும் தடுப்பு மருந்துகள் வந்துகொண்டிருக்கின்றன.

மே 1-ம் தேதியிலிருந்து 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அப்போது இன்னும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது இன்னும் வேகமெடுக்கும். கரோனா தடுப்பூசி அறிவியல் ரீதியில் பாதுகாப்பானது.

இஸ்ரேலில் 68%-க்கும் மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், முகக்கவசம் செலுத்த வேண்டிய அவசியமில்லாத சூழல் உள்ளது. அங்கு கரோனா தொற்றும் இல்லை, உயிரிழப்பும் இல்லை. அந்த நிலையை நாம் சீக்கிரமாக அடைய வேண்டும். ஏனென்றால் இயல்பு வாழ்க்கை முக்கியம். இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவது நம் கையில்தான் உள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும். நம் வாசலுக்கு அருகிலேயே கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதனைப் போட்டுக்கொள்ள வேண்டும்".

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x