Published : 21 Apr 2021 08:17 AM
Last Updated : 21 Apr 2021 08:17 AM

மக்கள் நீதி மய்யத்திலிருந்து கமீலா நாசர் திடீர் ராஜினாமா

மக்கள் நீதி மய்யக் கட்சியின் மாநிலச் செயலாளராக செயல்பட்டு வந்த கமீலா நாசர் கட்சியிலிருந்து திடீரென விலகினார். அவர் சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளார் சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது கட்சியின் மாநிலச் செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த திருமதி.கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமீலா நாசர் பிரபல நடிகர் நாசரின் மனைவி ஆவார். மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோதே தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். தேர்தல் களத்தையும் சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.

சீட் மறுப்பு காரண்மா?

கடந்த மக்களவைத் தேர்தலில் கமீலா நாசர் சென்னை மத்திய தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம், மதுரவாயில் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக கடந்த வாரமே அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அவரது கடிதம் பரிசீலனைக்குப் பின் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று அவர் கட்சியிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x