Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

கரோனா பரவலால் கூடுதல் சுற்றுக்கு ஏற்பாடு; வாக்கு எண்ணிக்கை 2 நாட்கள் நடைபெற வாய்ப்பு: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை சுற்றுகளைஅதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கை2 நாட்கள் நடைபெற வாய்ப்பு

உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி,வில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகரில் உள்ள வித்யா பொறியியல் கல்லூரியில் மே 2-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணங்களால் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதுகுறித்து அனைத்துக் கட்சியினர், வேட்பாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இரா.கண்ணன் கூறும்போது, கரானோ தொற்றுப் பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, ராஜபாளையம் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணஇரு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 மேஜைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளாக வாக்குஎண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று தபால் வாக்குகளை எண்ணவும் இரு மேஜைகள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோன்று வில்லிபுத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகளைஎண்ண இரு அறைகள் ஒதுக்கப்பட்டு 45 சுற்றுகளாக எண்ணப்படும். சிவகாசி தொகுதிக்கு 12 மேஜைகள் அமைக்கப்பட்டு 31 சுற்றுகளாகவும், திருச்சுழி தொகுதிக்கு இரு அறைகளில் 14 சுற்றுகளாகவும், விருதுநகர் தொகுதிக்கு இரு அறைகளில் 16 மேஜைகள் அமைக்கப்பட்டு 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேலும், சாத்தூர் தொகுதிக்கு2 அறைகளில் 16 மேஜைகளில் 44 சுற்றுகளாகவும், அருப்புக்கோட்டை தொகுதிக்கு 2 அறைகளில் 16 மேஜைகளில் 20 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு சுற்றுக்கு சராசரியாக 45 நிமிடங்கள் ஆகும். கரோனா கட்டுப்பாடுகளால் போதியஇடைவெளியில்தான் எண்ணிக்கைமேஜைகள் அமைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கட்சியினர் கூடுதல் முகவர்களை நியமித்துக் கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் மேஜைகள் அமைக்கப்பட்டு கூடுதல் சுற்றுகள் காரணமாக 2 நாட்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்காக 7 தொகுதிகளிலும் இம்மாதம் 29,30-ம் தேதிகளில் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்படும். அதில் முகவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா பரவலைத் தடுக்க முடியும், என்று கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், எஸ்பி பெருமாள் மற்றும்வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x