Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிர்வாகத்தின் சார்பில் சென்னையில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளில் பால் பாக்கெட்கள் உற்பத்தி செய்து பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
பொதுமக்கள் குழப்பம்
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் உற்பத்தி செய்து தென் சென்னை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் இன்றைய தேதியும் (ஏப்.20), நாளைய தேதியும் (ஏப்.21) என இரண்டு விதமான தேதிகள் (Use By Date) அச்சிடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
பின்தேதியிட்டு அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பாலை காலையில் காய்ச்சும்போதே கெட்டுப் போனதாக கூறி பால் முகவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி பால் முகவர்களும் கெட்டுப் போன பாலுக்கு பதிலாக வேறு பால் பாக்கெட்டுகளை மாற்றி கொடுத்துள்ளனர்.
எனவே பின் தேதியிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது எப்படி..? அந்த பால் பாக்கெட்களில் இருந்த பாலை காலையில் காய்ச்சும் போதே கெட்டுப் போனது ஏன்..? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பால் முகவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு பொன்னுசாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT