Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பல்லாவரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. சமீபகாலமாக அங்கு குப்பை, கழிவுகளை அகற்றாததால் நாளுக்கு நாள் அதிகரித்து, மலைபோல குப்பை தேங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை குப்பைக் கிடங்கில் திடீரெனத் தீப்பற்றியது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. தகவலறிந்து தாம்பரம், வேளச்சேரி, அசோக் நகரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட வீரர்கள், சுமார் 10 மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், அப்பகுதியில் தொடர்ந்து கடும் புகைமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "ரேடியல் சாலையில் உள்ள கிடங்கில் குப்பை கொட்டப்பட்டு, அங்கிருந்து வேங்கடமங்கலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுவந்தது. ஆனால், சமீபகாலமாக அங்கிருந்து குப்பை கொண்டு செல்லாததால், மலைபோல குப்பை தேங்கியுள்ளது. இங்கிருந்து குப்பை அகற்றாத விவகாரத்தில், பல முறைகேடுகள் நிலவுவதாகத் தெரிகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, குப்பை கிடங்கை காலி செய்ய வேண்டும். மேலும், கிடங்கை முறையாகப் பராமரிக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT