Last Updated : 20 Apr, 2021 07:48 PM

 

Published : 20 Apr 2021 07:48 PM
Last Updated : 20 Apr 2021 07:48 PM

கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியைச் சேர்ந்தோரின் பத்திரப்பதிவை நிராகரிக்கலாம்: சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவு

மதுரை

கரோனா கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்தவர்களின் பதிவை நிராகரிக்கலாம் என சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பதிவுத்துறை தலைவர், அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் கரோனா தொற்றை தடுக்க முககவசம் அணிதல், கைகளை தண்ணீர் அல்லது கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தலை கடைபிடிக்க வேண்டும். இவற்றை பதிவு அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களும் கட்டாயம் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே பதிவுத்துறை அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். அலுவலக நுழைவாயிலில் அலுவலர் ஒருவரை அமர்த்தி, பதிவுப்பணியில் அவசரத் தேவை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இடைத்தரகர்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் அனைத்து பொதுமக்களின் பெயர், தொலைபேசி எண், உள்/வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றை தேதி வாரியாக குறிப்பிட்டு தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். ஆவணத்தை பதிவுக்காக தாக்கல் செய்பவர் மட்டுமே முதலில் அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். ஆவண விபரங்களை சார் பதிவாளர் சரி பார்த்த பிறகே, ஆவணத்தில் சம்பந்தப்பட்ட பிற நபர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றே திரும்ப வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதால் பொதுமக்கள் மீண்டும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருவதும், நூறு சதவீத பதிவு இலக்கையும் எட்ட முடியும். விரல் ரேகை இயந்திரம், கம்யூட்டர் என அலுவலகத்தில் கையாளப்படும் அனைத்து இயந்திரங்களையும் பயன்படுத்தும் முன்பும், பின்பும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

அலுவலத்தில் யாருக்காவது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், கம்ப்யூட்டர் தொகுப்பு பணியாளர்கள், ஐபி கேமரா பணியாளர் மற்றும் ஒளிவருடல் பணியாளர்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாவட்ட பதிவாளர் நிலைக்கு கீழ் பணிபுரியும் 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களில் இணை நோய் உள்ளவர்களை உரிய மருத்துவ சான்று பெற்றுக் கொண்டு பொதுமக்கள் தொடர்பு இல்லாத பணியில் நியமிக்க பதிவுத்துறை துணைத் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

கரோனா தொற்றாளர்கள் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி விபரங்களை பெற்று, அப்பகுதியிலிருந்து பதிவுக்கு வருவோரின் ஆவணங்களை பரிசீலிக்காமல், உரிய திருப்புச்சீட்டு வழங்கி பதிவை நிராகரிக்கலாம். கட்டுப்பாட்டு பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டால் தற்காலிகமாக இடமாற்றம் செய்யலாம். கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பணியாளர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x