Published : 20 Apr 2021 03:45 PM
Last Updated : 20 Apr 2021 03:45 PM

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கடலில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் 'சுருக்குமடி வலை' கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்கத் தடை விதித்து 2000ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள், 'சுருக்குமடி வலை'யைக் கொண்டு மீன் பிடிக்கலாம் என 2014ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறி, 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 'சுருக்குமடி வலை'யைக் கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுருக்குமடி வலைகள் பயன்படுத்தத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2015ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தத் தடை விதித்த உத்தரவை மறு பரிசீலனை செய்துள்ளது எனவும், சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக முடிவு செய்து தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் எவரும் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்துவதில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மீனவர்கள் நலன் கருதி மீன்பிடித் தொழிலை முறைப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x