Published : 20 Apr 2021 01:19 PM
Last Updated : 20 Apr 2021 01:19 PM

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு

சென்னை

கரோனா தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், 10ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பில் சேர்வதற்கான தகுதி குறித்து அறிய 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் கரோனா முதல் அலை காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் எதுவும் நேரடியாகச் செயல்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த ஜனவரியில் தொற்று வெகுவாகக் குறைந்த நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வும், பள்ளிகள் திறப்பும் வழக்கம்போல் நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு 10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் அலை பரவல் அதிகரிப்பால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 12ஆம் வகுப்புக்கு எளிதாகப் போய் விடுவார்கள். ஆனால், 10ஆம் வகுப்பு மாணவர்கள் எந்த அடிப்படையில் 11ஆம் வகுப்பில் தங்கள் விரும்பிய குரூப்பைத் தேர்வு செய்ய வேண்டும், அதேபோன்று எந்த அடிப்படையில் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் குரூப்பைத் தேர்வு செய்ய அனுமதிக்க முடியும், இதில் பள்ளி நடைமுறையும் பாதிக்கப்படும் என்பதால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றித் தேர்ச்சி என்றாலும் 11ஆம் வகுப்புக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதில் தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் தங்கள் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கு அனுமதி என்கிற உத்தரவைப் பெற்றுவிட்டார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளில் என்ன செய்வது என்பதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

எழுதினால் தகுதி; அரசு தேர்ச்சி என்றால் 35 மதிப்பெண்கள் மட்டுமே

மாநில அளவில் தேர்வு நடத்துவது என்பதே அது. அதன்படி பத்தாம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை உயர்த்தும் எண்ணமிருந்தால் அரசு நடத்தும் மாநில அளவிலான தேர்வில் கலந்துகொண்டு மதிப்பெண் பெறலாம் என்கிற ஏற்பாட்டை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

எழுதினால் நல்ல மதிப்பெண் பெறலாம் என்கிற மாணவர்கள் வந்து மாநில அளவிலான தேர்வு எழுதலாம். அரசு தேர்ச்சி அறிவித்ததே போதும் என்று நினைப்பவர்கள் எழுதத் தேவையில்லை அவர்களுக்கு ஒரு பாடத்துக்கு 35 மதிப்பெண் வீதம் 5 பாடத்துக்கும் போடப்படும்.

இதற்கான முடிவு கொள்கை அளவில் எடுக்கப்பட்டாலும், அடுத்துவரும் புதிய அரசிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு அந்த அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே இது நடைமுறைக்கு வரும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு முடிவெடுத்தாலும் கரோனா பரவல் காரணமாக மாணவர்கள் விருப்பப்பட்டாலும் தேர்வு எழுத வர முடியுமா? மீண்டும் மொத்தமாக தேர்வெழுதக் குவிந்தால் மாணவர்கள், அவர்கள் வீட்டிலுள்ளோர், ஆசிரியர்கள் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.

மாணவர்கள் விருப்பப்படாவிட்டாலும் பெற்றோர் நெருக்கடி காரணமாகத் தேர்வு எழுதும் சூழலுக்குத் தள்ளப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் என்கிற பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்பதால் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசே இதுகுறித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x