Last Updated : 20 Apr, 2021 10:59 AM

 

Published : 20 Apr 2021 10:59 AM
Last Updated : 20 Apr 2021 10:59 AM

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைக்கு குடல் அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த சித்திக் மனைவி ரஷியா.இவர், உள்ளூரில் கர்ப்பகால பிரசோதனை செய்துள்ளார். அப்போது, ரஷியாவின் சிறுகுடலின் முதல் பகுதி (டியோடினம் ) வளர்ச்சியின்றி சுருங்கி இருப்பதும், அதனால் பனிக்குட நீர் அதிகமாக இருப்பதும் கண்டறிப்பட்டது.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ராணியார் அரசு மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையின் தலைமை மகப்பேறு மருத்துவர் அமுதா மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர் ஆகியோர் ஆகியோர் கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டின் தீவிரம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசனை கூறினர்.
அதன்படி, அதிகப்படியான பனிக்குட நீரினால் எந்த நேரமும் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் இருந்ததால் அதிகப்படியான நீர் ஆம்னியோசென்டிசிஸ் என்ற சிறப்பு சிகிச்சை மூலம் 2 முறை நீக்கப்பட்டது.

இதனால் பனிக்குட நீர் இயல்புநிலைக்கு திரும்பியதையடுத்து நிறைமாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
பிறந்தவுடன் குழந்தைக்கு மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் வயிறு வீக்கம் இருந்ததையடுத்து பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பின்னர், குழந்தையை பரிசோதனை செய்ததில் அதன் சிறுகுடல் சுருங்கி இருப்பதும், இரைப்பை அதிக வீக்கத்துடன் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியம் மற்றும் மயக்கவியல் மருத்துவர் டேனியல் ஆகியோர் அடங்கிய மருத்துவகுழுவினர் குழந்தைக்கு அறுவைசிகிச்சை மூலம் சிறுகுடலின் முதல் பகுதியில் இருந்த அடைப்பை சரிசெய்தனர்.

அதன்பிறகு, வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.
மூச்சுத்திணறல் சீரானதையடுத்து படிப்படியாக செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. மூன்று வார தீவிர சிகிச்சைக்குபிறகு பச்சிளங்குழந்தை நல்ல உடல் ஆரோக்கித்துடன் நேற்று (ஏப்.19) வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பச்சிளங்குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மு.பூவதி பாராட்டினார்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி கூறியது:

இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகள் அரிதாக நடக்கக்கூடியதாகும். கரோனா பரவல் தீவிரம் போன்ற இக்கட்டான சூழலிலும்கூட பச்சிளங்குழந்தைக்கு குடல் அறுவைசிகிச்சையை செய்து உயிரை காப்பாற்றியது பாராட்டத்தக்கது.

தனியார் மருத்துவமனையில் சுமார் 2 லட்சத்துக்கும் மேல் செலவாகக் கூடிய இந்த சிகிச்சையானது அரசு ராணியார் மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 24-ம் தேதியில் இருந்து மீண்டும் செயல்பட்டு வரும் ராணியார் அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 14-ம் தேதி வரை 1,000 குழந்தைகளுக்கும் மேல் பிறந்துள்ளன.

இங்கு, தாய் மற்றும் சேய்க்கு ஒருங்கிணைந்த அனைத்து விதமான உயர் சிகிச்சைகளும் இலவசமாக கிடைக்கின்றன என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x