Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, பகலில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலம்முழுவதும் இரவு நேர ஊரடங்குஇன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 முதல் அதிகாலை4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் தனியார், பொது பேருந்து சேவை,வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும்தனியார் வாகன பயன்பாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இடையிலான பொது, தனியார் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தேநீர் கடைகள், உணவகங்கள், காய்கறி, பலசரக்கு கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து வகை ஷோரூம்கள், நகை மற்றும் ஜவுளிக்கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல்பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. சுற்றுலாத் தலங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்று இறைச்சி, மீன் உள்ளிட்டஅனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசியப் பணிகளான பால், பத்திரிகை விநியோகம்,மருத்துவம் சார்ந்த சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை.
விரைவு பேருந்துகள்
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பகல் நேர பேருந்து சேவையை அதிகரிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படாது. பகல் நேரங்களில் இயக்கப்படும் பேருந்து சேவைகளில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற அறிவுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படும் பேருந்துகள், அதிகாலை 4 மணி தொடங்கி இரவு8 மணிக்குள் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.
விரைவுப் பேருந்துகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு பயண தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இல்லாதபட்சத்தில் கட்டணத் தொகை திருப்பி வழங்கப்படும். மாநகர போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை அதிகாலை 4 முதல்இரவு 10 மணி வரை இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT