Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக திமுக புகார்: யாரும் நுழையவில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆசான் நினைவுபொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், மர்ம நபர்கள் நுழைந்ததாக வேட்பாளர் மற்றும் திமுகவினர் புகார் தெரிவித்த நிலையில், யாரும்நுழையவில்லை என திருப்போரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கீரப்பாக்கம் அருகே உள்ள ஆசான் நினைவு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் வாக்கில் இக்கல்லூரி வளாகத்தில் மர்ம நபர்கள் சிலர் புகுந்ததாக திமுகவினர் மற்றும் விசிக வேட்பாளர் பாலாஜி உள்ளிட்டோர் புகார் தெரிவித்து, கல்லூரியின் முன்பு திரண்டனர். இதேபோல், பாமகவினரும் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன், வாக்கு எண்ணிக்கை மையத்தில் சோதனை மேற்கொண்டார். இதில், கல்லூரியின் நிர்வாகப் பணிகளுக்காக 2 ஊழியர்கள் மையத்துக்கு வந்தது தெரிந்தது.

அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கல்லூரியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையான அனுமதி பெற்றதும் அதற்கான அடையாள அட்டை வைத்திருப்பது தெரிந்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே மர்மநபர்கள் யாரும் நுழையவில்லை என திருப்போரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x