Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

கரூர் மாவட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டிய அறையில் ஏசி, சர்வர்கள் இயங்கியதால் சர்ச்சை: கணினி உபகரணங்களை எடுத்துவர தடை விதிக்க திமுக வேட்பாளர் கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடை பெற்ற தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வாக்கு எண்ணும் மைய மான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளா கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாது காப்பு, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முகவர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் பூட்டப்பட்ட அறை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏசி இயங்கியதுடன், சர்வர்களும் செயல்பாட்டில் இருந்துள்ளன. இதனால், சந்தேகமடைந்த திமுக வினர், இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பி சுஷாந்த்சாய் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் அங்கு வந்து ஆய்வு நடத்தினர்.

இதில், மாணவர்கள் வகுப்பு முடிந்து சர்வர் மற்றும் ஏசியை அணைக்காமல் சென்றுவிட்டதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனக் கூறி கரூர் கோட் டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிர மணியன் அந்த அறையின் சாவியை பெற்றுக்கொண்டார். இதையடுத்து திமுகவினரும் அங்கிருந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து, கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ உடனி ருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: 2 நாட்கள் விடுமுறை என்ற நிலையில் கல்லூரி வளா கத்தில் பூட்டப்பட்ட அறையில் ஏசி, கணினி சர்வர்கள் இயக்கத்தில் இருந்துள்ளன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கம் ஏற்புடைய தாக இல்லை.

77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிய 45 நிமிடங் களாகும். இதனால் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலை ஏற்படும். எனவே, 28 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கையை விரைவாக நடத்த வேண்டும். இதுகுறித்து ஆட்சியரி டம் தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைகள் உள்ள வளாகத்தில் மடிக்கணினி, வைபை, கணினி உபகரணங்கள் எடுத்து வர, பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x