Published : 19 Apr 2021 08:45 PM
Last Updated : 19 Apr 2021 08:45 PM

‘கரோனா’ கட்டுப்பாடுகளால் பூக்கள் விலை வீழ்ச்சி: கடந்த மாதம் ரூ.3 ஆயிரத்திற்கு விற்ற மதுரை மல்லிகை ரூ.150-க்கு விற்பனை

மதுரை

‘கரோனா’ பரவல் அதிகரித்து வருவதால் கோவில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

‘கரோனா’ பரவுவதால் கோவில்களுக்கு செல்வது முதல் கோவில் திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் வரை சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த ஆண்டும் இதேபோன்ற கட்டுப்பாடுகளால் பூ வியாபாரம் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியடைந்தது. கடந்த தீபாவளி முதல்தான் பூ வியாபாரம் மீண்டும் களைகட்டத்தொடங்கியது. தற்போது கடந்த சில வாரமாக மீண்டும் கரோனா வேகமாக பரவுவதால் சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளால் தற்போது மீண்டும் பூ வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

தென் தமிழகத்தின் முக்கிய பூ சந்தையான மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று காலை மதுரை மல்லிகை கிலோ ரூ.150, முல்லை கிலோ ரூ.150, பிச்சி பூ ரூ. 200, சம்மங்கி ரூ. 50, செவ்வந்தி கிலோ ரூ.150, அரளி பூ ரூ. 50, செண்டுமல்லி ரூ. 30, ரோஜா பூக்கள் கிலோ ரூ.80 விற்பனையானது. இதில் அனைத்து பூக்களும் கடந்த மாதம் இதை விட பல மடங்கு அதிக விலைக்கு விற்பனையானது.

குறிப்பாக மதுரை மல்லிகை ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், இன்று ரூ.150 விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில வாரம் வரை நாள் ஒன்றுக்கு 2 டன் மதுரை மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தநிலையில் கடந்த ஒரு வாரமாகதான் 10 டன் வர ஆரம்பித்தது.

பூக்கள் வரத்து அதிகரித்தநிலையில் மதுரை மல்லிகை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக வருமானம் இல்லாவிட்டாலும் மதுரை மல்லிகை செடிகளை விவசாயிகள் பெரும்பாடுப்பட்டு காப்பாற்றி வந்தனர்.

கடந்த சில மாதமாகதான் ஒரளவு விலை உயர்ந்தநிலையில் மீண்டும் கரோனாவால் சந்தைகளில் வரவேற்பு இல்லாமல் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு பூக்கள் வாங்க ஆளில்லாததால் 50 சதவீதம் மல்லிகைத்தோட்டங்கள் அழிந்தன. இந்த ஆண்டும் இதே நிலை தற்போது தொடர்வதால்

மதுரை மல்லிகை பூக்களின் விலை வீழ்ச்சி காரணமாக போக்குவரத்து மற்றும் பூக்கள் பறிப்பு கூலிக்கு கூட வருமானம் இல்லை. வருமானம் இல்லாமல் செடிகளை மட்டும் எப்படி காப்பாற்றுவது என்பது தெரியவில்லை. இந்த ஆண்டும் கடந்த ஆண்டு போல் தொடர்ந்தால் மதுரை மல்லிகை காணாமல் போய்விடும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x