

கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக சென்னை மாநகராட்சி ஆணையர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டால் கைதாகாமல் இருக்க நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விவேக், ஏப். 16 அன்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், ஏப்ரல் 17 மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக்கை பார்க்கவந்த மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், கரோனா தடுப்பூசி, விவேக்கின் உடல் நிலை குறித்து சர்ச்சைக் கருத்துக்களை கூறினார். முகக்கவசம் ஏன் போடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் கரோனாவே இல்லை, எல்லாம் ஏமாற்று, என அரசு குறித்தும், சுகாதாரத்துறைச் செயலர் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கரோனா தடுப்பூசிக்கு எதிராக பேசி மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் புகார் கொடுத்துள்ளார். அவரது புகார் குறித்து சட்ட ஆலோசனை நடத்தி மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடர முடிவெடுப்போம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
போலீஸ் வழக்கு பதிவு செய்தால் வழக்கில் தாம் கைது செய்யப்பட்டு விடுவோம் என்பதால் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்,
அவரது மனுவில், “தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டார், உள்நோக்கத்தோடு வேண்டும் என்றே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை, எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை”. என மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது