

தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டு பணம் கேட்டு தகவல் வரத் தொடங்கியதாகக் கூறி, சைபர் கிரைமில் புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, பயன்படுத்தப்படாத தனது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதிலிருந்து பலரிடம் பணம் கேட்கப்படுவதாகப் புதுச்சேரி சைபர் கிரைமில் இன்று புகார் தந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், " siva dmk pondy என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முகநூல் கணக்கு, சரியாக இயக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் எனது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அந்த முகநூல் பக்கத்தை ஹேக் செய்து இயக்கி, அதன் வழியாகச் சிலரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு வருகின்றனர். நான் உரையாடுவது போன்று பலரிடம் பணத்தைக் கேட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
பொய்யான தகவலை உண்மை என்று நம்பி மக்கள் பணத்தைக் கொடுத்து ஏமாறாமல் இருக்க, உடனடியாக அந்த சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், அந்த முகநூலை முடக்கும்படியும் சைபர் கிரைமில் புகார் தந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
சைபர் கிரைம் பிரிவில் இப்புகார் தொடர்பாக விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர். முகநூல் கணக்கை ஹேக் செய்து அதன் மூலம் பணம் கேட்டு பலருக்கு அனுப்பிய தகவல்களும் புகார் மனுவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சைபர் போலீஸார் குறிப்பிட்டனர்.