Published : 19 Apr 2021 04:30 PM
Last Updated : 19 Apr 2021 04:30 PM

தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்: பிரதமருக்கு மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி கடிதம்

சென்னை

கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் பிரம்மாண்டமான பணியினை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மேற்கொள்ளத்தக்க வகையில் அவற்றின் உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும், செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தையும் இதில் ஈடுபடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டுமெனவும், ஹிந்துஸ்தான் பயோடெக் செங்கல்பட்டு நிறுவனத்தை செயல்படுத்த கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

“அன்புள்ள பிரதமருக்கு, வணக்கம்.

நம் நாட்டில் இன்று நிலவிவரும் கடுமையான கோவிட் தொற்று குறித்து தாங்கள் அறிவீர்கள். இதை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரிக்கவும் கிடைக்கும் இடங்களில் இருந்து எல்லாம் தடுப்பூசி வாங்கிடவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் ஒரு குறிப்பிட்ட காலம் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். இந்த தடுப்பூசியை மக்கள் மூன்றாவது தவணையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசியை நமது நாட்டிலேயே தயாரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் தாங்கள் உடன் படுவீர்கள் என்று கருதுகிறேன். இந்த பிரம்மாண்டமான பணியில் மேலே குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமல்லாது ஏனைய நான்கு பொதுத்துறை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களும் ஈடுபடுத்த படவில்லை என்பது வருத்தம் அளிக்க செய்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தங்களை நேரில் சந்தித்து செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, இந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொண்டேன்.

சமீபத்தில், ஜனவரி 8-ஆம் தேதி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த தொழிற்சாலையை பார்வையிட்டபோது நானும் அங்கு சென்று அவரை சந்தித்தேன். தொழிற்சாலையை முழுமையாக பார்வையிட்ட அமைச்சர், உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டு இருப்பதை கண்டார். இந்த தொழிற்சாலைக்கு தேவையான நிதியை தருவதாக வாக்குறுதி அளித்தார் .

கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் பிரம்மாண்டமான பணியினை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மேற்கொள்ளத்தக்க வகையில் அவற்றின் உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். இதுதான் மிகப் பிரதானமான கடமை என்றும் கருதுகிறேன். இந்த சூழ்நிலையில் செங்கற்பட்டு நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தக்க அனைத்து திறனையும் பெற்றுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

தங்களுக்கு உள்ள கடுமையான பணிகளுக்கு மத்தியில் இந்த விஷயத்திலும் தாங்கள் கவனத்தை செலுத்தி செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட உதவிட வேண்டுகிறேன்”.

இவ்வாறு டி.கே.ரங்கராஜன் வேண்டுகோள் வைத்து கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x