Published : 19 Apr 2021 02:25 PM
Last Updated : 19 Apr 2021 02:25 PM

சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு: உதகையில் வணிகர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர தமிழக அரசு தடை விதித்ததை தொடர்ந்து வணிகர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் உட்பட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே போல் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் முதல் சுற்றுலாவை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக உதகை சேரிங்கிராஸ் பகுதியில், வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுத்தர சில தளர்வுகள் உடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களுடன் உதகை வட்டாட்சியர் குப்புராஜ், உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழகம் முழுவதற்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும். அரசின் அறிவுறுத்தலின் படி தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்நிலையில், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சுற்றுலாவுக்கான தடையை நீக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x