Last Updated : 19 Apr, 2021 01:07 PM

 

Published : 19 Apr 2021 01:07 PM
Last Updated : 19 Apr 2021 01:07 PM

ஜெயங்கொண்டம் அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்த தாய் உயிரிழப்பு; குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்த சம்பவத்தில், தாய் உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவந்திகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (35). விவசாயியான இவர், பாண்டி பஜார் கிராமத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மகேஸ்வரி (29) என்பவருடன் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு வயதில் இரட்டைக் குழந்தைகள் (தர்ஷன், தர்ஷினி) உள்ளனர்.

இந்நிலையில், மகேஸ்வரி இன்று (ஏப்.19) காலை தனது இரட்டைக் குழந்தைகளுடன் தனது வீட்டில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு குழந்தைகளைக் கட்டி அணைத்த வகையில் தீக்குளித்தார்.

மூவரின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வீட்டினுள் சென்று உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். இதில், மகேஸ்வரி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். குழந்தைகள் இருவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெயபால் கடைக்குச் சென்ற பிறகு, மகேஸ்வரி வீட்டில் தீக்குளித்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக அவர் தீக்குளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x