Last Updated : 14 Dec, 2015 10:24 AM

 

Published : 14 Dec 2015 10:24 AM
Last Updated : 14 Dec 2015 10:24 AM

வெள்ளத்தில் சிக்கிய மக்களை நெஞ்சம் நிறைய நெகிழ வைத்த தேசிய பேரிடர் மீட்புப் படை

தமிழகத்தில் இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கிய 22,450 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். ஓய்வு, உணவு, உறக்கமின்றி கடந்த ஒரு மாதமாக இவர்கள் ஆற்றிய பணி உயிர் பிழைத்த மக்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் நெகிழ வைத்துள்ளது.

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) நாடு முழுவதும் 12 இடங்களில் செயல் பட்டு வருகிறது. தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, பிஹார், உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ் சாப், அசாம், கொல்கத்தா, அருணாச் சலப்பிரதேசம், வாரணாசி ஆகிய பகுதிகளில் 14,500 மீட்புப் படையினர் பணியாற்றி வருகின்றனர்.

இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகளை மீட்டு, அவர்களுக்கு உதவி செய்வதே இவர்களின் முக்கியப் பணி. தமிழகத்தில் கடந்த ஒரு மாத மாக பெய்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத் தில் மூழ்கி தவித்தன. வெள்ளத் தில் சிக்கிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையை களமிறக்கியது மத்திய அரசு.

50 குழுக்கள் அமைப்பு

இதையடுத்து நவீன உபகரணங் களுடன் 8 பட்டாலியன்களைச் (கம்பெனி) சேர்ந்த 1,715 பேர் வெள்ள பாதிப்பு பகுதிக்கு வந்தனர். சென்னை பெருநகரத்துக்கு 25 குழுக்கள், திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களுக்கு தலா 11 குழுக்கள், கடலூர் மாவட்டத்துக்கு 1 குழு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்கு தலா 1 குழு என பிரித்து அனுப் பப்பட்டது.

22,450 பேர் மீட்பு

சென்னையில் கடுமையாக பாதிக்கப்பட்ட தாம்பரம், ஈக்காட்டுத் தாங்கல், வேளச்சேரி, முடிச்சூர், கோட்டூர்புரம், அடையாறு, அண் ணாநகர், குன்றத்தூர், நந்தப்பாக் கம், வில்லிவாக்கம், பள்ளிக் கரணை, புழல், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கம், மணலி என 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ரப்பர் படகு மூலம் குடியிருப்புகளுக்குச் சென்று பத்திரமாக மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 22,450 பேர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணை கமாண்டர் ராஜன்பாலு ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘50 குழுக்களைச் சேர்ந்த படையினருக்கு 194 ரப்பர் படகுகள் வழங்கப்பட்டுள்ளன. நீச்சல் பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்ற 96 பேர் களத்தில் இறக்கப்பட்டனர். 6 முதல் 8 அடி வரை நீரில் மூழ்கிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாது காப்பாக மீட்டனர். 30 கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை மற் றும் கடலூர் பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்களும் மீட்கப் பட்டுள்ளன.

இதுவே முதல்முறை..

தேசிய பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட பொது மக்கள் முகாம்களில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்குத் தேவையான உதவிகள், அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்க தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. சென்னை மற்றும் கடலூரில் 40 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப் பட்டு 359 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்த நிலையில், கனமழைக்கு இனி வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்ததால், தென்மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு பணிகளை அடுத்து நிவாரணப் பணிகளிலும் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை பேரிடர் மீட்புப் பணியில் ஒரே நேரத்தில் 1,715 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவது இதுவே முதல் முறையாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x