Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

மணல் கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் மீது பெட்ரோல் குண்டு வீசி போலீஸ்காரரை கொல்ல முயற்சி: 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலை

வேதாரண்யம் அருகே மணல் கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் மீது பெட்ரோல் குண்டுவீசி போலீஸ்காரரைக் கொல்ல முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கரியாப்பட்டினத்தைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை தென்னம்புலம் கிராமம் கருப்பன்காடு பகுதியைச் சேர்ந்த வீரமணி(24) என்பவர் ஓட்டி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு கத்திரிப்புலத்தில் இருந்து, உரிய ஆவணம் இன்றி டிராக்டரில் மணல் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்து அங்கு சென்ற நாகை தனிப்பிரிவு போலீஸார், கரியாப்பட்டினம் அருகே டிராக்டரை தடுத்து நிறுத்தினர். அப்போது, டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு, ஓட்டுநர் வீரமணி தப்பியோடிவிட்டார். இதையடுத்து, டிராக்டரை தனிப்படை போலீஸ்காரர் டீன் என்பவர், கரியாப்பட்டினம் காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார்.

காவல் நிலையம் அருகே டிராக்டர் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் டிராக்டரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர், டிராக்டர் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில், டிராக்டரை ஓட்டிவந்த போலீஸ்காரர் டீனுக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே, அவருக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். டிராக்டர் ஓட்டுநர் வீரமணியை(24) போலீஸார் கைது செய்து, பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x