Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM
சென்னையில் மாநகராட்சி சார்பில் 12 இடங்களில் முதல்கட்ட கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மேலாண்மைக்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து, வேலைப் பளு அதிகமாவதை குறைக்கும் வகையில், நோயாளிகளுக்கு அங்கு மேற்கொள்ளப்படும் முதல்கட்ட பணிகள் சிலவற்றை வெளியில் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் 12 இடங்களில் முதல்கட்ட கரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.
ரத்த பரிசோதனை
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு முதலில் அரசு மருத்துவமனைகளில் ரத்தம், ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்படும். எக்ஸ்ரே சோதனையும் செய்யப்படும். இவற்றை தற்போது முதல்கட்ட பரிசோதனை முகாம்களிலேயே செய்துவிடுகிறோம்.
வீட்டிலேயே ஓய்வு
அந்த நோயாளியின் நிலை அறிந்து, வீட்டிலேயே ஓய்வெடுக்கலாமா அல்லது கரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி கொண்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பலாமா என முடிவெடுக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் காத்திருப்பு மற்றும் அரசு மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள் கூட்டம் தவிர்க்கப்படுகிறது.
இதற்காக சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள விக்டோரியா மாணவர் விடுதி, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட 12 இடங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT