Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

ஓராண்டுக்கு முன் நடைபெற்ற போட்டித் தேர்வு; தமிழகத்தில் வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வுப் பட்டியல் எப்போது வெளியாகும்?- 42,000 பி.எட். பட்டதாரிகள் காத்திருப்பு

வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வு முடிவுகளுக்காக 42,000 பி.எட். பட்டதாரிகள் ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர்.

தமிழக அரசின் தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம்தேதி முதல் 16-ம் தேதி வரைஇணையவழியில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வில், தமிழகம் முழுவதும் 42,686 பி.எட். பட்டதாரிகள் பங்கேற்றனர். தேர்வு முடிந்த 5-வது நாளில் உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

அதற்குப் பிறகு 11 மாதங் கள் கழித்து, அனைத்து தேர்வர் களின் மதிப்பெண்களும் இணைய தளத்தில் வெளியாகின.

பொதுவாக ஒரு தேர்வில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப் பட்டு, அடுத்த சில நாட்களில் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வில் மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகி யும், இன்னும் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை.

நிறைவேறாத நோக்கம்

இணையவழி தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் ஏமாற்றம்அடைந்துள்ளனர். இணையவழியில் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கமே, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்பதுதான்.

தேர்வு எழுதியவர்கள் அதிருப்தி

ஆனால், வெறும் 42,686 பேர் பங்கேற்ற இணையவழித் தேர்வின் இறுதிப் பட்டியலை ஓராண்டாகியும் இன்னும் வெளியிடப்படாதது, ஆசிரியர் தேர்வுவாரியம் மீது தேர்வு எழுதியவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, "இனியும் காலதாமதம் செய்யாமல், வட்டாரக் கல்வி அதிகாரி இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளி யிட வேண்டும்" என்று தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x