Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM
கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், உடுமலை அருகேவெளியாட்கள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் கிராம மக்கள் சாலையில் முட்களை போட்டு தடை ஏற்படுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்குட்பட்டது குருவப்பநாயக்கனூர் ஊராட்சி. அங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குறிச்சிக்கோட்டையில் இருந்து பழநி செல்லும் பிரதான சாலையில் இருந்து குருவப்பநாயக்கனூர் கிராமத்துக்கு இணைப்புச் சாலை உள்ளது. கரோனா பரவலை தடுப்பதற்காக, இணைப்புச் சாலை வழியே வெளியாட்கள் கிராமத்துக்குள் நுழையாத வகையில், அதே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் முட்களை வெட்டிப் போட்டு பாதையை அடைத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே எங்கள் கிராமத்துக்குள் வெளியாட்கள் வந்து செல்வதை கண்காணிக்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் கிராமத்துக்குள் வந்து செல்ல ஒரு பாதையை மட்டும் உபயோகித்து வருகிறோம். இதர இணைப்புச் சாலைகளை அடைத்துள்ளோம்’ என்றனர்.
இதுதொடர்பாக ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி கூறும்போது, ‘கிராம மக்கள் பாதையை அடைத்தது எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT