Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM
தமிழகத்துக்கு 1 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்துக்கு இதுவரை 47.03 லட்சம் கோவிஷீல்டு, 7.82 லட்சம் கோவேக்சின் என மொத்தம் 54.85 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதில், 47 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தடுப்பூசிகள் கையிருப்பு குறைவாக இருப்பதால் பல மையங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்துக்கு 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவேக்சின் என 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன்படி, 1 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்துகளை தமிழகத்துக்கு மத்திய அரசு நேற்று அனுப்பியது.
கோவேக்சின் தடுப்பு மருந்துகள் மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தில் வைக்கப்பட்டு, தேவைப்படும் தடுப்பூசி மையங்களுக்கு பிரித்தும் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து இன்று வரவுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT