Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று வெளியாகுமா?- முதல்வர் பழனிசாமி சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை

முதல்வர் பழனிசாமி இன்று சென்னை வரும் நிலையில், தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நேற்று முன்தினம் முதல் தினசரி 8 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தொடர்ந்து, நாள்தோறும் 90 ஆயிரத்தை தாண்டி பரிசோதனைகள் நடைபெறுவதாலும் 2-ம் அலை மிக வேகமாக பரவுவதாலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் கரோனா அதிகரித்த நிலையிலேயே தமிழக தலைமைச் செயலர் அதிகாரிகளுடன் ஆலோசித்ததுடன், புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்தார்.

அதன்படி, தற்போது சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் மற்றும் இதர இடங்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தடை விதிக்கப்பட்டது. காய்கறி, மளிகை கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.

பேருந்துகளில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் உட்பட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் கரோனா பரவல் அதிகரிப்பை பொறுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டி வரும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது. அரசு அச்சப்பட்டது போன்றே அடுத்தடுத்த நாட்களில் கரோனா பரவல் நாள்தோறும் அதிகரித்து தற்போது 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக டெல்லியில் கரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, மகாராஷ்டிராவில் 14 நாட்கள் தொடர் ஊரடங்கு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த மாநிலங்கள் அளவுக்கு தமிழகத்தில் கரோனா பாதிப்புஇல்லாவிட்டாலும், வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசு கருதுகிறது. இதை கருத்தில் கொண்டு தற்போதே கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுக்கப்பட்டது.

குறிப்பாக, மற்ற மாநிலங்களில் உள்ளது போல், இரவு நேர ஊரடங்கு, கடைகளின் திறப்பு நேரத்தை குறைப்பது, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஐடி நிறுவனங்களில் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதி, நோய்த்தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை முடிவில் அறிவிப்பு வெளியாகும். குறிப்பாக நாளை முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து சென்னை திரும்புகிறார். அவர் வந்ததும் மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், தேவையான கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x