Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

தீயணைப்பு, சிறைத் துறை காவலர்கள் பணிக்கான உடற்திறன் தேர்வு தள்ளிவைப்பு: சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை

இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு ஆண்கள், பெண்கள் என 3 ஆயிரத்து 784 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர், சிறைத் துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பேர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத் தேர்வில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற் தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டி ஆகியவை ஏப்.21-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x