Published : 17 Apr 2021 06:11 PM
Last Updated : 17 Apr 2021 06:11 PM

போலீஸ் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க விவேக் உடல் தகனம்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் விவேக் உடல் திரையுலகினர், ரசிகர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் இடுகாட்டில் போலீஸ் மரியாதையுடன் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

நடிகர் விவேக் சமூக அக்கறையுள்ள கலைஞர். மக்கள் மீதான அக்கறை, சுற்றுச் சூழல், மரம் நடுதல் என அவரது பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. அவரது கடைசி நிகழ்ச்சிக்கூட கரோனா பரவலைத்தடுக்க மக்கள் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காக தானே தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விட்டதாக இருந்தது.

அவரது கடைசி நிகழ்ச்சியாக அது அமைந்தது, அதன் பின்னர் நேற்றுக்காலை வீட்டிலிருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். உடனடியாக அவருக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு எக்மோ கருவி மூலம் இதய துடிப்பு இயங்க வைக்கப்பட்டது. காலையில் மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு அவர் உயிரை பறித்தது.

அவரது மறைவு செய்திக்கேட்டு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. திரையுலகினர், ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாமின் பெயரால் ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தை தொடங்கினார். இதுவரை 33.5 லட்சம் மரம் நட்டுள்ளார். கிராமம்தோறும் இளைஞர் குழுக்களை உருவாக்கியுள்ளார். விவேக்கின் மரணத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். அவரது சமூக அக்கறை, கலைச் சேவைக்காக அவரது உடலுக்கு போலீஸ் மரியாதை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

மாலை 5 மணிக்கு மேட்டுக்குப்பம் மயானத்தில் இறுதி சடங்கு நடக்க உள்ளது. இதற்காக அவரது உடல் வீட்டிலிருந்து வேனில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக மேட்டுக்குப்பம் மயானம் நோக்கி சென்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்ட இறுதி ஊர்வலம் 2 மணி நேரத்திற்கும் மேலாக சென்று மேட்டுக்குப்பம் மயானத்தை அடைந்தது. அங்கு அவருக்கு (Guard of Honour) எனப்படும் ஆயுதமேந்திய காவல் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறந்து போனவர் நம் சமூகத்திற்கு எந்த அளவுக்கு பங்காற்றி இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து மாநில அரசின் ஒப்புதலுடன் அரசு மரியாதை உறுதி செய்யப்படும். அதில் இரண்டு வகை உண்டு முழு அரசு மரியாதை, காவல்துறை மரியாதை என இருவகை உண்டு.

அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறையில் மிகப்பெரிய பங்களிப்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தவர் இறந்து போனார் என்றால் அவருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அரசு முடிவெடுக்கும். தற்போது விவேக்குக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்படுகிறது.

அவரது உடல் மயானத்துக்கு கொண்டு வரப்பட்டவுடன் அதற்கான சடங்குகள் முடிந்தது. பின்னர் பின்னர் உதவி ஆணையர் தலைமையில் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக்காவலர், 3 பிகிலர், 13 பேராக இரண்டு வரிசையில் போலீஸார் நின்று துப்பாக்கிகளை தரையில் தாழ்த்தி கார்டு ஆஃப் ஹானர் மரியாதை செலுத்தினர். தலை கவிழ்ந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் ஆணைக்கிணங்க காவலர்கள் தங்கள் இடுப்பிலிருந்த குண்டுகளை துப்பாக்கியில் போட்டு லோடு செய்தனர். பின்னர் துப்பாக்கிகள் வானை நோக்கி மூன்று முறை என 78 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பிகிலர்கள் இசையுடன் போலீஸார் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் போலீஸார் இடத்தை விட்டு அகன்றனர். அதன் பின் குடும்பத்தினர் அவர்கள் சடங்குகளை செய்தனர். விவேக்கின் மூத்த மகள் அவரது உடலுக்கான இறுதிச் சடங்குகளை செய்தார், பின்னர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x