Published : 17 Apr 2021 03:01 PM
Last Updated : 17 Apr 2021 03:01 PM

பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி: உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு 

சென்னை

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்ட அனுபவமில்லாத கிரிஜா வைத்தியநாதன் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்த உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அவர்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும், நில நிர்வாக துறை செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும் சுற்றுச்சூழல் விவகாரங்களை அவர் கவனித்து உள்ளதாக கூறி, அது சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த, அதற்கான குழுவின் தலைவராகவும், கூவம் நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவில் தலைவராகவும், மருத்துவ கழிவுகள் மேலாண்மையில் அனுபவம் உள்ளதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதன் மூலம் அவர் பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி தேவைப்படக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆன அனுபவங்களை பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும் பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாகவும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x